என்னைப் பற்றி!
அன்புடையீர் வணக்கம்,
"மேதினியில் யான் பெற்ற பேரின்பம் எதுவென்றால்
சீரிளமை குறையாத தமிழைத் தாய்மொழியாய்
கொண்டதென்பேன்"
என்னைப் பற்றித் தெரிந்துக்கொள்ள: https://www.prathiba4fetna.com
என் பெயர் சண்முகபிரதீபா என்கின்ற பிரதீபா பிரேம், நான் சோழ வள நாடான தஞ்சைத் தரணியில் பிறந்தேன்.
தனித்தமிழில் மேல் கொண்ட தீராத காதலால் என்னுடைய பெயரை மருதயாழினி என்று மாற்றிக் கொண்டேன்.
தஞ்சை மாவட்டம் மருதகுடி என்னும் ஊர் தான் என் தந்தையின் ஊர், ஆனால் பிறந்து வளர்ந்தது தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் என்னும் ஊரில், அங்கேதான் இயற்கையின் கையைப் பிடித்துக் கொண்டே என்னுடைய தொடக்கக் கல்வியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முடித்தேன். அதன் பின்னர்த் தஞ்சை மாவட்டத்திற்கு உயர்கல்வி படிக்கச் சென்று, தஞ்சை சாஸ்த்ரா கல்லூரியில் முதுகலை கணினிப் படிப்பை முடித்தேன். தற்போது தமிழ் மொழிமேல் கொண்ட தீராத அன்பால் தமிழ் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராகவும் கடந்த 15 ஆண்டுகளாகத் தன்னார்வலராகவும் இருந்து வருகிறேன்.
இயற்கை, தமிழிசை, தமிழர்(சித்த) மருத்துவம், தமிழரின் வரலாறு,பண்பாடு போன்றவற்றை நாம் தெரிந்து கொண்டதைப்போலவே அடுத்தத் தலைமுறை பிள்ளைகளும், இந்த உலகமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆவல். உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்குத் தமிழ் தேவையை உணர்த்துவது, நல்ல தூய தமிழைப் பாடங்கள், கதைகள், பாடல்கள், வழியே சொல்லிக் கொடுத்து வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை மீட்டெடுப்பதும் என்னுடைய வாழ்நாள் கனவு.
இந்தக் கனவுகளுடன் தான் தமிழ்ச் சங்கத்தில் 2010 முதல் இயங்கி கொண்டிருந்தேன். அந்த வேளையில் தான் பேரவையில் செயலாற்ற அழைப்பு வந்தது, அதன் விழைவாகக் கடந்த 2020 முதல் 2024 வரை இலக்கியக் குழு தன்னார்வலராகவும், தாய்த்தமிழ் பள்ளிகள் குழு, தொன்மை தொடக்கம் தொடர்ச்சிக் குழு, பேரவை மலர்க் குழு, வணக்கம் வட அமெரிக்கா, பேரவை அருவி ஆசிரியர் குழு, பல்கலைக்கழகக் குழு, தற்கால மொழி பெயர்ப்புக் குழு, பேரவை கவியரங்க ஒருங்கிணைப்பு, "The Trove" என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிற்கான பணி, செய்தி மடல்கள் தயாரிப்புப் பணி ஆகியவற்றில் இணைந்து முழு ஈடுபட்டுடன் பணி செய்து வந்தேன்.
பேரவை இலக்கியக் குழுத் துணைத்தலைவராக 2022 முதல் 2024 வரை இருந்த நிலையில் மாதம் தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்தியதோடு பேரவைத் திருவிழாவை இணையவழியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தி அதில் தமிழிசை, கவியரங்கம், எனப் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளைத் தமிழ் நாட்டில் இருந்தும் , உலகத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் ஆளுமைகளை அழைத்து வந்து நடத்தினோம்.
மேலும் அட்லாண்டா, நியூயார்க், சாக்ரமாண்டோ, சான்ஆண்டானியோ பேரவை விழாக்களில் இலக்கிய ஆளுமைகளை அழைத்து வந்து மிகப்பெரிய இலக்கிய இணையமர்வை நடத்தினோம்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வட அமெரிக்காவில் பட்டயம், பட்டப் படிப்புகள் படிப்பதற்கான தொடக்க வேலைகளைச் செய்தோம்.
இன்னும் பல பேரவைப் பணிகளைக் குழுவோடு இணைந்து செய்ததில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.
தமிழ்த்தாயின் கைப்பிடித்துத் தமிழ்த் தன்னார்வலராக, தனித்தமிழ் ஆர்வலராக, கவிஞராக, எழுத்தாளராக, பேச்சாளராகத் தமிழ் சார்ந்த பல்வேறு தளங்களில் இப்போது இயங்கி வருகிறேன்.
இதுவரை எழுதியுள்ள நூல்கள் 8, தமிழ்நாடு அரசால் 2024 ஆம் ஆண்டில் வட அமெரிக்கச் சிறப்பு விருந்தினராகக் கவியரங்கத்தில் கலந்து கொண்டேன். பேரவை(FeTNA) வட அமெரிக்காவின் ஆற்றல் மிகு பெண்கள் விருதினை 2023 ஆம் ஆண்டு எனக்கு அளித்தது என்பதைப் பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன்.
“ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழியும்”
எனவே தமிழ் மொழியைப் போற்றுவோம், தலைமுறை தாண்டியும் தமிழ் மொழியை நமது அடுத்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு விட்டுச் செல்வோம், அதற்காக மட்டுமே நானும் இந்தப் பரபரப்பான உலகில் தமிழோடு ஓடிக் கொண்டிருக்கிறேன், அதற்கான முன்னெடுப்புகளை நன் பேரவையின் வாயிலாக உங்கள் அனைவருடனும் இணைந்து செய்ய எண்ணுகிறேன், அதற்கு உங்கள் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.
தமிழோடு நாம் நடக்கும் தடமெல்லாம் தமிழர் மரபும், பண்பாடும் கிளைக்கட்டும்!
இயக்குநராக எதிர்காலப் பணிகள் மற்றும் இலக்கு!
2026 -2028 ஆம் ஆண்டின் அணியின் நோக்கங்களை நிறைவேற்ற உறுப்பினர்களுடன் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நெருக்கமாகப் பணியாற்றி ஒற்றுமையை நிலவச் செய்வேன்
தலைமுறை தாண்டிய தமிழை வளர்க்க நமது இளம் படைப்பாளர்களுக்கு அவர்களுடைய, எண்ண ஓட்டத்திற்குத் தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் எழுத்து, படைப்பு மற்றும் பேச்சாற்றலை வளர்ப்பது மற்றும் அவர்களைப் பேரவை வழியாக உலக அளவிளான நிகழ்வுகளில் பங்குபெறச் செய்வது.
நமது தமிழ் கல்வெட்டுகள் , பழங்கால வரலாறு, மொழியின் தொன்மை, மரபு மற்றும் பண்பாடு சார்ந்த தமிழ்நாட்டின் அனைத்துச் செல்வங்களைப் பற்றியும் அற நூல்கள் கூறும் அறக்கருத்துகளைப் பற்றியும் இங்கே வளரும் அடுத்தத் தலைமுறை பிள்ளைகளுக்குக் கற்றுத் தர தளத்தை அமைக்க வேண்டும்.
இன்றைய சூழலில் நமது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தேவையான மன நலம் மற்றும் உடல் நலம் பேணும் நிகழ்வுகளை நடத்த துணை நிற்பேன்.
மொழி, இலக்கியம், வரலாறு,தமிழிசை, இயற்கை, தமிழ் மருத்துவம், தொண்டு, மற்றும் தமிழரின் கலைகளை, பண்பாட்டைக் காக்க குழுவுடன் இணைந்து திட்டங்களை உருவாக்குவேன்.
தொன்மையும் பழமையும் கொண்ட தமிழ் மொழியை உலக அரங்கில் நிறுவ ஒத்துழைப்பேன்.
நலிந்த எழுத்தாளர்களையும் , படைப்பாளர்களையும் பேரவைக்கு அழைத்து வந்து அனைவருக்கும் சரியான மதிப்பூதியம் கிடைக்கச் செய்வேன்
உலகெங்கும் வறுமையின் பிடியில் இருக்கும் பிள்ளைகளுக்குக் கல்வி, மற்றும் அடிப்படை தேவைகளை வழங்க திட்டங்களை நிறைவேற்றுவேன்
இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவுவேன், அதற்கான ஒரு குழுவை அமைத்து செயல்படுவேன்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் இருந்து அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்
உங்கள் அனைவருடனும் ஒன்றிணைந்து பேரவையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என்று உறுதி பூணுகிறேன்.
தமிழ் மொழி வழங்கிய கொடைகள் :
2023 ஆம் ஆண்டிற்கான பேரவையின் ஆற்றல் மிகு பெண்கள் விருது
2024 ஜனவரியில் நடைபெற்ற அயலகத் தமிழர் (NRT) மாநாட்டில் மாநில அரசின் அமெரிக்க சிறப்பு பேச்சாளர்
மனிதம் விதைப்போம் அமைப்பின் மங்கையரில் மாணிக்கம் விருது- 2024
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின்(FeTNA )அமெரிக்காவின் ஆற்றல் மிகு பெண்கள் விருது -2023
தமிழன்பன் 80 விருது-2022
ஐயை சக்தி விருது-2022
தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி வழங்கிய முத்தமிழ் திலகம் விருது-2022!
"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு"
"தமிழோடு நாம் நடக்கும் தடமெல்லாம் தமிழர் மரபும், பண்பாடும் கிளைக்கட்டும்!"
நன்றி!
சண்முகபிரதீபா (எ )பிரதீபா பிரேம் ( மருதயாழினி)